சனி, 5 மே, 2012

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்


பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்



விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.
வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.


உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.


பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.


பூரான் கடியை தீர்க்க மருந்து


குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.


வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.


மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.


ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

வெள்ளி, 4 மே, 2012

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்


 அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான சுன்னத் வல் ஜமாஅத் எனும் சத்திய கொள்கை பாதையில் இருக்கும் நண்பர்களுக்கும் நசீபாக்குவாயாக!! ஆமீன்!!


நன்றி: உண்மை உலகம்

I.Q - வை வளர்ப்பது எப்படி?


 I.Q. . ஐ.க்யூ என்றால் என்ன?வை வளர்ப்பது எப்படி?
Inbox
x




I.Q - வை வளர்ப்பது எப்படி?





ஐ.க்யூ. என்றால் என்ன? இந்த ஐ.க்யூவுக்கும், குழந்தையின் படிப்புக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.

“ஐ.க்யூ. (I.Q .) என்பது கூரிய நுண்ணறிவு. நமது மரபியல்படி அதாவது ஜீன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் அறிவு, மூளை அறிவு எனப்படும். கற்பதால் வரும் அறிவு சோதனைக்குட்பட்ட அறிவு எனப்படும். அதைப்போலவே கற்றுக்கொள்வதால் வரும் அறிவு ரெப்ளக்டிவ் அறிவு எனப்படும். முதல் பிரிவைத் தவிர, மற்ற இரண்டு விதமான அறிவையும் வளர்ப்பது சாத்தியமானதே. புதிர்கள், கணக்குகள் ஆகியவற்றுக்கு விடை காண்பது, கற்பனை வளத்தைப் பெருக்குவதற்கான பயிற்சிகள் அளித்தல், காபி போன்ற பானங்களை அருந்துவது, ஐ.க்யூவை தற்காலிகமாக அதிகரிக்கும். ஆழமாக உள்ளிழுத்து மூச்சு விடுவதும் நல்ல பலனைத் தரும். ஐ.க்யூ. 130 உள்ளவர்கள் மேதைகள் என்றும், ஐ.க்யூ. 70-க்கும் குறைவாக இருப்பவர்கள் மக்கு என்றும், ஐ.க்யூ. 29 ஆக இருப்பவர்கள் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில், இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தையின் மனநிலையில் இருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்” என்கிறார் டாக்டர் ஷாலினி. ஐ.க்யூ. பற்றி அவர் அளித்த விளக்கங்கள் இதோ:

ஐ.க்யூ. குறைபாட்டின் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
அறிவுசார் முன்னேற்றம் அடைய முடியாமல் இருப்பது.
உட்காருதல், தவழுதல், நடை, பேச்சு ஆகிய முக்கிய முன்னேற்றங்கள் காலதாமதப்படும்.
பேச்சு, நடத்தையால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் குழந்தைத்தனமான நடவடிக்கைகளைக் கொண்டு இருப்பார்கள்.
பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வு காணுவதில் சிரமப்படுதல் மற்றும் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.
குறைவான கற்கும் திறன் மற்றும் சரியாக சிந்திக்க முடியாமல் இருப்பார்கள்.
எந்த விஷயத்தையும் நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிரமப்படுவார்கள்.
பள்ளிகளின் கல்வி எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் இருப்பார்கள்.
பெற்றோர்கள் சொல்வதைக் குழந்தைகள் கேட்கமாட்டார்கள். பெற்றோர்களின் அடையாளத் திணிப்பை ஏற்றுக் கொண்டால் அவர்களின் தனித்தன்மை போய்விடும் என்று குழந்தைகள் எண்ணுகின்றனர். இது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.
ஐ.க்யூ. அளவைக் எப்படி கண்டு பிடிக்கலாம்?

இளங்குழந்தைகளிடம் உள்ள ஐ.க்யூ. திறனை அளக்க பல முறைகள் உள்ளன. இதில், ஆறு முதல் பதினாறு வயதுக் குழந்தைகளின் ஐ.க்யூ.வை அளிக்க வெஸ்ச்லர் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல் ஃபார் சில்ரன் (The Wechsler Intelligence Scale for Children – WSIC ) என்ற தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வெஸ்ச்லர் முறையில் தகவல், வார்த்தைகளை அறியும் திறன், விஷயங்களைக் கிரகித்தல், ஒற்றுமைகளைப் பார்த்து அறிதல், கணிதம், படத்தைப் பூர்த்தி செய்தல், ப்ளாக்குகளை வடிவமைத்தல், பொருள்களை இணைத்தல், படங்களை வரிசைப்படுத்தி குறித்தல் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு ஐ.க்யூ. அளவு கணக்கிடப்படுகிறது.

குழந்தைகளின் ஐ.க்யூ.வை கண்டுபிடிக்க மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம். அவர்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ப செயல் விளக்கப் பயிற்சிகள் கொடுப்பார்கள். சின்னச் சின்ன டெஸ்ட் வைத்து அதில் அவர்கள் தேறும் விதத்தில் ஐ.க்யூ.வை கணித்துச் சொல்வார்கள்.

குழந்தைகளுக்கு ஐ.க்யூ. வை வளர்ப்பது எப்படி?

பெற்றோர் ‘உன் வகுப்பில் படிக்கும் பையன் என்னெவெல்லாம் செய்கிறான், நீ தண்டம்’ என்றுகுழந்தையைச் சாடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கும் முதல் அடியாகும். பின்னால் குழந்தையே ஏதேனும் சாதிக்கலாம் என நினைத்தாலும் ‘என்னால் முடியாது, நான் எதற்கும் லாயக்கில்லாதவன், திறமைகள் அற்றவன்’ என்ற அவநம்பிக்கை அதன் மனதில் தோன்றிவிடுகிறது. இம்மனநிலையைப் போக்கி ‘எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்.

குழந்தைகளிடத்தில் எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். கொஞ்சம் கடினமாக உழைத்துப் பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்’ என்று சொல்வது நல்லது.
போட்டிகளில் எப்போதும் முதல் பரிசுக்கே முயற்சி செய்யாமல் மூன்றாம் பரிசுக்கு முதலில் முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள். மூன்றாம் பரிசும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதையும், முழுத் தோல்வியை விட மூன்றாம் பரிசு நல்லதே என்பதையும் கூறி குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்.
தோல்விகளும் வெற்றிகளும் நிகழ்வுகளின் இருவிதப் பரிமாணங்களே என்பதை சற்று விளக்கமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். முயற்சித்துக்கொண்டு இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.
பெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விஷயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை இல்லாமல் வளர்கின்றன.
குழந்தைகளிடத்தில் சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை உருவாக்க வேண்டும். குழந்தையைத் தானாக சாப்பிடுமாறு ஊக்குவிப்பது, தானாக உடையணிந்து கொள்வதை மகிழ்ச்சியுடன் ஆதரிப்பது, சாதனை ஊக்கத்தை குழந்தைகளிடத்தில் வளர்ப்பது போன்றவை பெற்றோரின் கடமைகள். குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சிகளை இளம் வயதிலேயே கற்பிப்பதும் அவர்களிடத்தில் சுதந்திரமாக செயல்படும் உணர்வைத் தூண்டி வளர்க்கும்.
சற்றே கடினமான ஆனால் நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய குழந்தைகளை ஊக்கப்படுத்துதல். எக்காரணம் கொண்டும் எதார்த்தத்திற்கு புறம்பான இலக்குகளை நோக்கி குழந்தைகளை ஊக்குவிக்கக்கூடாது.
அ, ஆ, இ, ஈ அல்லது அ, ஆ, இ, ஈ எழுத்துக்களை இரண்டு வயது குழந்தை சொல்ல இயலாத நிலையிலும் தொடர்ந்து அவ்வெழுத்துக்களை கற்று ஒப்பிக்குமாறு ஊக்கப்படுத்தி வரவேண்டும். அக்குழந்தை பல முயற்சிக்குப் பின் முதன்முறையாக எழுத்துக்களை ஒப்பிக்கும்போது கட்டிப்பிடித்தோ, ஓரு முத்தம் கொடுத்தோ அல்லது ஓரு  சாக்லேட் கொடுத்தோ மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்தவேண்டும்
தோல்விகளும் கற்றுக் கொள்வதின் ஒரு பரிமாணமே என குழந்தைகளை உணரச் செய்து தோல்விகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் மனதில் தோல்வி பயத்தைப் போக்கி வெற்றி அடையவேண்டும் என்னும் ஊக்கத்தினை உருவாக்க வேண்டும்.
முயற்சி திருவினையாக்கும் என்னும் நம்பிக்கையினை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும்.
குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைத்து அவர்களை சோம்பேறியாக்குவதை விட அவர்களுக்கு கற்பனைத் திறனை அதிகரிக்கும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தலாம்.
இசையை சிறுவயது முதலே கற்கும் குழந்தைகளின்  IQ POWER மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இசையைக் கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதால் அவர்களின் அறிவுக்கூர்மை வளர்கிறது.
குழந்தைகளிடம் அதிகமாகப் பேச வேண்டும்.
அதிக சொற்களைப் பேசுதல் மிகவும் நல்லது. பெரியவர்கள்  பேசும்போது குழந்தைகளையும் அருகில் இருக்கச் செய்தல் வேண்டும்.
குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது ஐந்து ’இ’க்களை நினைவில் கொள்ள வேண்டும். ஐந்து ’C ’ க்கள்:-,  control, challenge, confidence, curiosity, contextualize ஆகியவைதான்!

கண்டரோல் என்பது எதிலும் கட்டுப்பாடுடன், தானே இருக்கக் குழந்தைகளைப் பழக்குவது.

சேலஞ்ச் என்பது சவாலைச் சமாளிக்க உங்கள் குழந்தையை அழைக்கும் விதமாக சவால் தரும் விஷயங்களை முன் வைப்பது

கான்பிடன்ஸ் என்பது எதிலும் ஒரு நம்பிக்கையை குழந்தையிடம் ஏற்படுத்துவது.

க்யூரியாசிட்டி என்பது எதையும் ஓர் ஆர்வத்துடன் கூர்ந்து ஆராயும் பழக்கத்தை மேற்கொள்ள வைப்பது.

கான்டெக்ஸ்டுவைலஸ் என்பது ஒரு விஷயத்தை நிஜ உலகுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் அணுகுமுறையை சொல்லித் தருவது. திரைப்படத்தில் அல்லது தொலைக்காட்சியில் வருவதற்கும் நிஜத்திற்கும் உள்ள சம்பந்தம் போன்றவற்றை சொல்லித் தந்தால் நிஜ உலகின் வாழ்க்கை பற்றிய நல்ல அணுகுமுறை ஏற்படும்.

இறுதியாக ஒர்கிங் மெமரி அல்லது ஷார்ட் டெர்ம் மெமரி எனப்படும் குறுகிய கால நினைவாற்றலில் ஒரு சமயம் ஒருவர் ஏழு விஷயங்களுக்கு மேல் நினைவில் கொள்ளமுடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரே சமயத்தில் ஏராளமான விஷயங்களைத் திணிக்காமல் அறிவுத் திறனை அளவோடு வளர்ப்பதோடு, சீரான இடைவெளியில் நினைவுத் திறனைக் கூட்டும் பயிற்சியைத் தந்தால் எந்தக் குழந்தையும் நம்பர் ஒன் குழந்தைதான்.