புதன், 15 ஆகஸ்ட், 2012

நாய்கள் ஜாக்கிரதை!


 நாய்கள் ஜாக்கிரதை!
Inbox
x

தி மனிதன் குகையில் வாழ்ந்த காலத்தில் இருந்தே மனிதனோடு நேசம் கொண்டவையாக இருப்பவை நாய்கள். செல்லப் பிராணியாக, காவல்காரனாக, வேட்டைக்கு உறுதுணையாக, துப்பறியும் வேலை பார்க்கும் திறமை உடையதாக, பார்வையற்றோரை வழி நடத்திச் செல்வதாக... இப்படிப் பல விதங்களிலும் மனிதனோடு நெருங்கிய பந்தத்தில் இருக்கின்றன நாய்கள். ஆனால், 'ரேபிஸ்’ (Rabies) என்னும் வெறி நோய் நாய்களைத் தாக்கினால், அவற்றால் கடிபட்டு அலட்சியப்படுத்துவோருக்கு மரணத்தைத் தவிர வேறு வழி இல்லை. அதிலும் பாதிக்கப்பட்டவரை மிகுந்த வேதனைக்கு ஆட்படுத்திய பிறகே மரணம் சம்பவிக்கும். நாய்க்கடியை எப்படிச் சமாளிப்பது?
 
கோவை பொது மருத்துவர் ஆர்.ஸ்ரீனிவாசன் முதல் உதவி வழிகளைச் சொல்கிறார்:
'' 'ரேபிஸ்’ என்ற கிரேக்க வார்த்தைக்குப் 'பைத்தியம்’ என்று அர்த்தம். இது ஒருவகை வைரஸால் ஏற்படுவது. மூளையை வீங்கச் செய்யும். விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவக் கூடியது. நாய் கடிக்கும்போது அதன் உமிழ்நீரில் உள்ள வைரஸ், கடிபட்ட காயத்தின் மூலம் மனிதனுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. வெறி நாய் கடித்த பிறகு கவனிக்காமல் விட்டுவிட்டால் உணவை விழுங்குவதில் சிரமம், தண்ணீரைக் கண்டால் பயந்து அலறுவது, அதனால் தாகத்துடனேயே தவிப்பது போன்றவை நிகழும். இதனால்தான் இந்த நோய்க்கு 'ஹைட்ரோபோபியா’ (Hydrophobia) என்று பெயர்.
 
நாய்க்கடியில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. ரேபிஸ் நோய் உள்ள நாய் ஒருவரைக் கடித்துவிட்டால் சில மாதங்கள் வரை கடிபட்டவருக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. காரணம்... கடிபட்ட இடத்தில் இருந்து வைரஸானது மூளைக்குச் செல்லச் சிறிது காலம் பிடிக்கும். ஆனால், நிச்சயமாக அது மூளையைச் சென்று அடையும். அதன் பின்னர்தான் நோய் தன் வேலையைக் காட்டும். நோய்க்கான அறிகுறிகள் தென்படும்போது சிகிச்சை அளித்துக் குணமாக்கும் நிலையை நோயாளி கடந்துவிட்டிருப்பார். எனவே, கடித்தது வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தாலும் தெருநாயாக இருந்தாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது.
 
நாய் கடித்த இடத்தை நன்கு சோப் போட்டுக் கழுவ வேண்டும். ஆன்டிசெப்டிக் திரவங்கள் இருந்தால் அவற்றாலும் காயத்தைக் கழுவலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் காயத்தின் மீது மஞ்சள், சுண்ணாம்பு அல்லது பச்சிலைகள் போன்றவற்றை அரைத்துப் பூசக் கூடாது. கடிவாயில் கத்தியால் கீறி ரத்தத்தை வெளியேற்றுவதும் தவறு. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். டெட்டனஸ் என்ற ஊசியுடன் ரேபிஸ் வராமல் இருப்பதற்காக உள்ள சிறப்பு ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நாய் கடித்தவுடன் ரேபிஸ் வந்துவிடாமல் இருக்கத் தொப்புளைச் சுற்றி 14 ஊசி போடுவார்கள். இப்போது ஐந்து ஊசி போதுமானது. அதுவும் உடலில் எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். துரதிர்ஷ்டவசமாக மறுபடியும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நாய் கடித்துவிட்டால் இரண்டு ஊசி போதும்' என்று தைரியம் கொடுத்த டாக்டரிடம், ''வேறு மிருகங்களின் மூலமும் மனிதர்களுக்கு ரேபிஸ் வருமா?'' எனக் கேட்டோம்.
 
''97 சதவிகிதம் நாய்கள் மூலமாகத்தான் ரேபிஸ் தொற்று ஏற்படும். பூனை, குரங்கு, கழுதை போன்றவற்றை வெறி நாய் கடித்து, அவை மற்றவர்களைக் கடித்தாலும் அவர்களுக்கும் ரேபிஸ் வர வாய்ப்பு இருக்கிறது. அவ்வளவு ஏன்? ரேபிஸ் வந்த மனிதர் கடித்தால்கூட மற்றவர்களுக்கு ரேபிஸ் வந்துவிடும்'' என்கிறார் டாக்டர் ஆர்.ஸ்ரீனிவாசன்.
 
ரேபிஸ் அறிகுறி என்ன?
தமிழ்நாடு அரசு வன உயிரின மருத்துவ அலுவலர் என்.எஸ். மனோகரனைச் சந்தித்தோம்.
 
''நாய்க்கு வெறிநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?''
''நாய் வளர்ப்பவர்கள் உரிய தருணத்தில் வெறிநோய்த் தடுப்பூசியை நாய்க்குப் போடுவதன் மூலம் நாயையும் காப்பாற்றலாம். தங்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
30 நாள் குட்டியாக இருக்கும்போதே ஆன்டி ரேபிஸ் வாக்சின்  எனப்படும் தடுப்பூசியைப் போட வேண்டும். அடுத்த 30 நாட்கள் கழித்து பூஸ்டர் (ஙிஷீஷீstமீக்ஷீ) ஊசி போட வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒரு தடவை, நாயின் ஆயுள் உள்ள வரை ஆன்டி ரேபிஸ் வாக்சினைப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் நாய்க்கு நோ ரேபிஸ்!''
 
''நாய்க்கு ரேபிஸ் தொற்று இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்வது?''
''ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட நாய்க்கு மூன்று நிலைகள் உண்டு. முதல் நிலை மூன்று நாட்கள் வரை நீடிக்கும். இயல்புக்கு மீறிய பரபரப்புடன் நிலைகொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருக்கும். இரண்டாம் நிலை அபாயகரமானது. எஜமான் உட்பட அருகில் வரும் எவரையும் கடித்துக் குதறிவிடும். உயிர் இல்லாத கம்பி, மரம் போன்றவற்றையும் கடிக்கும். இது மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும். மூன்றாவது நிலை முற்றிய நிலை. மூளை பாதிக்கப்பட்டு நரம்புகள் செயல் இழக்கும். பக்கவாதம் வரும். முகத்தின் தசைகள் பாதிக்கப்படுவதால் எச்சிலைக்கூட விழுங்க முடியாது. உமிழ்நீர் ஒழுகியபடி இருக்கும். எதையும் சாப்பிட முடியாது. மூச்சுத் திணறி ஒரு சில நாட்களில் நாய் இறந்துவிடும். இதைக் கண்டறியத்தான் கடித்த நாய் உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.''
 
''ரேபிஸ் வந்த நாய்க்கு சிகிச்சை இருக்கிறதா?''
''இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் மற்றும் கால்நடை மருத்துவரது பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில், ரேபிஸ் என்று முடிவாகிவிட்டால் இரண்டு வழிகள் இருக்கின்றன.
ஒன்று: நோயுற்ற நாயைத் தனிமைப்படுத்தி அது இறக்கும்வரை காத்திருக்கலாம். நான்கு, ஐந்து நாட்கள் மிகவும் துன்பப்பட்டு இறக்கும். இன்னொன்று: சட்டப்படி, உரிய முறையில் அதைக் கருணைக்கொலை செய்துவிடுவதுதான்.''

IAS, IPS, IFS தேர்வெழுதத் தகுதிகள்


IAS, IPS, IFS தேர்வெழுதத் தகுதிகள்.


     சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வைஎழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றி தெளிவாக அறிவது அவசியம்.

கல்வித் தகுதி :

* அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தபட்ச தகுதி இளநிலைப் பட்டம்).

* இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.

* ஆனால், Main தேர்வு எழுத செல்லும் முன்பாக, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.

* அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை (professional) மற்றும் தொழில்நுட்ப கல்வித் தகுதியை வைத்துள்ளவர்களும், இந்தத் தேர்வை எழுதலாம்.

தேசிய அடையாள தகுதி :

* இந்திய குடிமக்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வாக முடியும்.

* மேலும், கடந்த, 1 ஜனவரி, 1962ம் ஆண்டிற்கு முன்பாக, நேபாளம், பூடான் மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்தவர்கள் மற்றும் பர்மா, எத்தியோபியா, கென்யா, மாலவி, பாகிஸ்தான், இலங்கை, உகாண்டா, தான்சானியா, வியட்நாம், சையர் மற்றும் சாம்பியா போன்ற நாடுகளிலிருந்து, இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் குடிபெயர்ந்துள்ள இந்திய வம்சாவழி மக்கள் ஆகியோர், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, IAS மற்றும் IPS ஆகலாம்.

வயது தகுதி :

* சிவில் சர்வீஸ் தேர்வெழுதுபவர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

* பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 30 வயது வரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

* OBC பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 33 வயதுவரை முயற்சி செய்யும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 35 வயதுவரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயது வரை வாய்ப்பளிக்கப்படுகிறது.

தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் :

பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம்4 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.

* இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச்(OBC) சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 7 முறை முயற்சி செய்யலாம்.

* SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள், 35 வயதுவரை, எத்தனைமுறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.

விண்ணப்ப நடைமுறைகள் :

     சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கவிரும்பும் ஒருவர், அதற்கான விண்ணப்பத்தை, தகவல் குறிப்பேட்டுடன் பெற வேண்டும். அதை எலக்ட்ரானிக் முறையில் ஸ்கேன் செய்ய முடியும் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் பெற முடியும்.

     பூர்த்திசெய்த விண்ணப்பத்தை, அதற்கானAcknowledgement அட்டையுடன் Secretary, Union Public Service Commission, Dholpur House, New Delhi - 110011 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நி


ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை நிலை

அப்துந் நாசிர்
பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்
ஸகாத்தை நிறைவேற்றுபவர்களின் சிறப்புகளையும்மறுமையில் அடையவிருக்கும் நன்மைகளையும் நாம் விரிவாகப் பார்த்தோம். அதே நேரத்தில் ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
இத்தகைய கொடும் தண்டனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றால் நாம் அவசியம் ஸகாத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் எத்தனையோ செல்வந்தர்கள் ஸகாத்தைக் கணக்கிட்டு நிறைவேற்றும் விசயத்தில் பொடும்போக்கானவர்களாகவே இருக்கின்றார்கள்.
மரணம் ஒரு மனிதனுக்கு எப்போது வரும் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. செல்வ வசதியைப் பெற்றும் ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். ஸகாத்தை நிறைவேற்றி மறுமை வேதனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதோ ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்
இணை கற்பிப்பவர்களின் பண்பு
இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!. அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்
அல்குர்ஆன் 41:6, 7
இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற ஒருவன் தான் ஸகாத்தை நிறைவேற்ற மாட்டான். இது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்கலாமா? ஒரு போதும் இருக்கக் கூடாது. உண்மையான முஸ்லிம்கள் ஸகாத்தை முறையாக நிறைவேற்றி விடுவார்கள்
மறுமையில் நஷ்டவாளிகள்
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்த போது அவர்களிடம் நான் போய்ச் சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் "கஅபாவின் அதிபதி மீது ஆணையாக! அவர்கள் நஷ்டவாளிகள்'' என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன்
என்னால் இருப்புக் கொள்ள முடியாததால் உடனே எழுந்து, "என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர்கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர'' என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு, "ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ, மாடோ, ஆடோ இருந்து அவற்றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததை விடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரை இறுதிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்க வரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்'' என்று கூறினார்கள்
நூல்கள்: புகாரி (6638), முஸ்லிம் (1809)
சூடாக்கப்பட்ட கல்லினால் நரக வேதனை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்
அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி (1408)
பழுக்கக் காய்ச்சி சூடு போடப்படும்
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக!. அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்
அல்குர்ஆன் 9:34
தங்கத்தையும் வெள்ளியையும் யார் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள் உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன் என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது'' என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை'' என்று விளக்கமளித்தார்கள் .
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் (1417)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 
"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
நூல்: முஸ்லிம் (1803 )
அல்லாஹ் மறுமை நாளில் மக்களை மஹ்ஷர் மைதானத்தில் ஒன்று கூட்டுவான். மறுமையில் ஒரு நாள் என்பது இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமாகும். ஸகாத் வழங்காதவனுக்குக் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை அவனுடைய செல்வங்கள் பழுக்கக் காய்ச்சி அவனுக்கு சூடு போடப்படும் .

அல்லாஹ் ஸகாத் வழங்காதவனிடம் கேள்வி கணக்குக் கேட்பதற்கு இரண்டு நாட்கள் தாமதமாக்கினால் ஒரு லட்சம் வருடங்களாகி விடும். அது வரை அவனுக்கு இந்த வேதனை தான். ஆனால் எத்தனை நாட்கள் தாமதமாக்கி நம்மிடம் கேள்வி கேட்பான் என்று நாம் உறுதியாகக் கூற முடியுமா? இதனை எண்ணிப் பார்க்கும் போது நம்முடைய உள்ளம் பதறுகிறது. அல்லாஹ் இந்த வேதனையிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும். நம்முடைய செல்வத்திற்கான ஸகாத்தை நாம் வழங்கி விட வேண்டும் .

ஸகாத் வழங்காதவர் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை அவருக்கு மஹ்ஷர் மைதானத்தில் வேதனை நடைபெறும். இவ்வாறே கால்நடைகளுக்கான ஸகாத்தை வழங்காவதர்களுக்கும் மஹ்ஷர் மைதானத்தில் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை வேதனை செய்யப்படும். பிறகு அவனிடம் கேள்வி கணக்கு கேட்ட பிறகு அவனுக்கு சொர்க்கம் என்றோ, நரகம் என்றோ தீர்ப்பளிக்கப்படும் என நபியவர்கள் மேற்கண்ட ஹதீஸில் கூறியுள்ளார்கள் .
இதிலிருந்து ஸகாத்தை நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவம் என்றாலும் இறைவனின் மன்னிப்பிற்குரிய குற்றம் தான் என்பதை அறிந்து கொள்ளலாம் .
கழுத்து நெரிக்கப்படுதல்
அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் .
அல்குர்ஆன் 3:180
இவ்வசனம் ஸகாத் வழங்காதவர்களைத் தான் குறிக்கிறது என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
பாம்பாக மாறும் செல்வம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம், கொடிய நஞ்சுடைய பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, "நான் தான் உனது செல்வம்; நான் தான் உனது கருவூலம்' என்று சொல்லும் இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு, "அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.'' எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள் .

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1403)

பாம்பின் வாயினால் கடிபடுதல்
"(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி தம்மவரை எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது "இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து) வந்த உனது செல்வம்'' என்று கூறப்படும். அவர் அதனிடமிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்ப முடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க்குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும் .
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1807)

நரகத்தின் காப்புகள்
யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தன்னுடைய மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவளுடைய மகளின் கையில் கெட்டியான இரு தங்க வளையல்கள் இருந்தன. "இதற்குரிய ஸகாத்தை நீ நிறைவேற்றி விட்டாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவள், இல்லை என்று கூறினாள். "இந்த இரண்டிற்கும் பகரமாக மறுமை நாளிலே நெருப்பாலான இரண்டு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு சந்தோசமளிக்குமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பெண் அந்த இரண்டையும் கழற்றினார். பிறகு அந்த இரண்டையும் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கினார். பிறகு, "இவையிரண்டும் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்குமுரியது'' என்று கூறினார் .
அறிவிப்பவர்: அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல்: நஸாயீ (2434)

ஒட்டகத்திற்கு ஸகாத் வழங்காதவனின் தண்டனை
"அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாவிட்டால் - தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும் - மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர் மீது ஏவி விடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டு களாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1803)

ஆடுகளுக்கு ஸகாத் வழங்காதவனின் தண்டனை
"அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்று விடாமல் வந்து அவரை முட்டித் தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவி விடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1803)

நபியவர்களின் உதவி இல்லை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது மறுமை நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்ற வில்லையாயின் அது மறுமை நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும் . மேலும் உங்களில் யாரும் மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து (அபயம் தேடிய வண்ணம்) "முஹம்மதே' எனக் கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன் .மேலும் யாரும் (மறுமை நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து "முஹம்மதே' எனக் கூற, அதற்கு நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை' என்று சொல்லும் படியான நிலைமை ஏற்பட வேண்டாம். (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன் .''

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி  )
நூல்: புகாரி (1402  )

நாம் நம்முடைய செல்வத்திற்கு முறையாக ஸகாத்தை நிறைவேற்றி மறுமையின் தண்டனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோமாக !
நன்றி: தமிழ்குரான்.இன்

சனி, 5 மே, 2012

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்


பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்



விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.
வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.


உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.


பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.


பூரான் கடியை தீர்க்க மருந்து


குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.


வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.


மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.


ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

வெள்ளி, 4 மே, 2012

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்


 அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான சுன்னத் வல் ஜமாஅத் எனும் சத்திய கொள்கை பாதையில் இருக்கும் நண்பர்களுக்கும் நசீபாக்குவாயாக!! ஆமீன்!!


நன்றி: உண்மை உலகம்

I.Q - வை வளர்ப்பது எப்படி?


 I.Q. . ஐ.க்யூ என்றால் என்ன?வை வளர்ப்பது எப்படி?
Inbox
x




I.Q - வை வளர்ப்பது எப்படி?





ஐ.க்யூ. என்றால் என்ன? இந்த ஐ.க்யூவுக்கும், குழந்தையின் படிப்புக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.

“ஐ.க்யூ. (I.Q .) என்பது கூரிய நுண்ணறிவு. நமது மரபியல்படி அதாவது ஜீன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் அறிவு, மூளை அறிவு எனப்படும். கற்பதால் வரும் அறிவு சோதனைக்குட்பட்ட அறிவு எனப்படும். அதைப்போலவே கற்றுக்கொள்வதால் வரும் அறிவு ரெப்ளக்டிவ் அறிவு எனப்படும். முதல் பிரிவைத் தவிர, மற்ற இரண்டு விதமான அறிவையும் வளர்ப்பது சாத்தியமானதே. புதிர்கள், கணக்குகள் ஆகியவற்றுக்கு விடை காண்பது, கற்பனை வளத்தைப் பெருக்குவதற்கான பயிற்சிகள் அளித்தல், காபி போன்ற பானங்களை அருந்துவது, ஐ.க்யூவை தற்காலிகமாக அதிகரிக்கும். ஆழமாக உள்ளிழுத்து மூச்சு விடுவதும் நல்ல பலனைத் தரும். ஐ.க்யூ. 130 உள்ளவர்கள் மேதைகள் என்றும், ஐ.க்யூ. 70-க்கும் குறைவாக இருப்பவர்கள் மக்கு என்றும், ஐ.க்யூ. 29 ஆக இருப்பவர்கள் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில், இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தையின் மனநிலையில் இருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்” என்கிறார் டாக்டர் ஷாலினி. ஐ.க்யூ. பற்றி அவர் அளித்த விளக்கங்கள் இதோ:

ஐ.க்யூ. குறைபாட்டின் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
அறிவுசார் முன்னேற்றம் அடைய முடியாமல் இருப்பது.
உட்காருதல், தவழுதல், நடை, பேச்சு ஆகிய முக்கிய முன்னேற்றங்கள் காலதாமதப்படும்.
பேச்சு, நடத்தையால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் குழந்தைத்தனமான நடவடிக்கைகளைக் கொண்டு இருப்பார்கள்.
பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வு காணுவதில் சிரமப்படுதல் மற்றும் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.
குறைவான கற்கும் திறன் மற்றும் சரியாக சிந்திக்க முடியாமல் இருப்பார்கள்.
எந்த விஷயத்தையும் நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிரமப்படுவார்கள்.
பள்ளிகளின் கல்வி எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் இருப்பார்கள்.
பெற்றோர்கள் சொல்வதைக் குழந்தைகள் கேட்கமாட்டார்கள். பெற்றோர்களின் அடையாளத் திணிப்பை ஏற்றுக் கொண்டால் அவர்களின் தனித்தன்மை போய்விடும் என்று குழந்தைகள் எண்ணுகின்றனர். இது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.
ஐ.க்யூ. அளவைக் எப்படி கண்டு பிடிக்கலாம்?

இளங்குழந்தைகளிடம் உள்ள ஐ.க்யூ. திறனை அளக்க பல முறைகள் உள்ளன. இதில், ஆறு முதல் பதினாறு வயதுக் குழந்தைகளின் ஐ.க்யூ.வை அளிக்க வெஸ்ச்லர் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல் ஃபார் சில்ரன் (The Wechsler Intelligence Scale for Children – WSIC ) என்ற தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வெஸ்ச்லர் முறையில் தகவல், வார்த்தைகளை அறியும் திறன், விஷயங்களைக் கிரகித்தல், ஒற்றுமைகளைப் பார்த்து அறிதல், கணிதம், படத்தைப் பூர்த்தி செய்தல், ப்ளாக்குகளை வடிவமைத்தல், பொருள்களை இணைத்தல், படங்களை வரிசைப்படுத்தி குறித்தல் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு ஐ.க்யூ. அளவு கணக்கிடப்படுகிறது.

குழந்தைகளின் ஐ.க்யூ.வை கண்டுபிடிக்க மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம். அவர்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ப செயல் விளக்கப் பயிற்சிகள் கொடுப்பார்கள். சின்னச் சின்ன டெஸ்ட் வைத்து அதில் அவர்கள் தேறும் விதத்தில் ஐ.க்யூ.வை கணித்துச் சொல்வார்கள்.

குழந்தைகளுக்கு ஐ.க்யூ. வை வளர்ப்பது எப்படி?

பெற்றோர் ‘உன் வகுப்பில் படிக்கும் பையன் என்னெவெல்லாம் செய்கிறான், நீ தண்டம்’ என்றுகுழந்தையைச் சாடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கும் முதல் அடியாகும். பின்னால் குழந்தையே ஏதேனும் சாதிக்கலாம் என நினைத்தாலும் ‘என்னால் முடியாது, நான் எதற்கும் லாயக்கில்லாதவன், திறமைகள் அற்றவன்’ என்ற அவநம்பிக்கை அதன் மனதில் தோன்றிவிடுகிறது. இம்மனநிலையைப் போக்கி ‘எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்.

குழந்தைகளிடத்தில் எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். கொஞ்சம் கடினமாக உழைத்துப் பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்’ என்று சொல்வது நல்லது.
போட்டிகளில் எப்போதும் முதல் பரிசுக்கே முயற்சி செய்யாமல் மூன்றாம் பரிசுக்கு முதலில் முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள். மூன்றாம் பரிசும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதையும், முழுத் தோல்வியை விட மூன்றாம் பரிசு நல்லதே என்பதையும் கூறி குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்.
தோல்விகளும் வெற்றிகளும் நிகழ்வுகளின் இருவிதப் பரிமாணங்களே என்பதை சற்று விளக்கமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். முயற்சித்துக்கொண்டு இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.
பெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விஷயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை இல்லாமல் வளர்கின்றன.
குழந்தைகளிடத்தில் சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை உருவாக்க வேண்டும். குழந்தையைத் தானாக சாப்பிடுமாறு ஊக்குவிப்பது, தானாக உடையணிந்து கொள்வதை மகிழ்ச்சியுடன் ஆதரிப்பது, சாதனை ஊக்கத்தை குழந்தைகளிடத்தில் வளர்ப்பது போன்றவை பெற்றோரின் கடமைகள். குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சிகளை இளம் வயதிலேயே கற்பிப்பதும் அவர்களிடத்தில் சுதந்திரமாக செயல்படும் உணர்வைத் தூண்டி வளர்க்கும்.
சற்றே கடினமான ஆனால் நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய குழந்தைகளை ஊக்கப்படுத்துதல். எக்காரணம் கொண்டும் எதார்த்தத்திற்கு புறம்பான இலக்குகளை நோக்கி குழந்தைகளை ஊக்குவிக்கக்கூடாது.
அ, ஆ, இ, ஈ அல்லது அ, ஆ, இ, ஈ எழுத்துக்களை இரண்டு வயது குழந்தை சொல்ல இயலாத நிலையிலும் தொடர்ந்து அவ்வெழுத்துக்களை கற்று ஒப்பிக்குமாறு ஊக்கப்படுத்தி வரவேண்டும். அக்குழந்தை பல முயற்சிக்குப் பின் முதன்முறையாக எழுத்துக்களை ஒப்பிக்கும்போது கட்டிப்பிடித்தோ, ஓரு முத்தம் கொடுத்தோ அல்லது ஓரு  சாக்லேட் கொடுத்தோ மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்தவேண்டும்
தோல்விகளும் கற்றுக் கொள்வதின் ஒரு பரிமாணமே என குழந்தைகளை உணரச் செய்து தோல்விகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் மனதில் தோல்வி பயத்தைப் போக்கி வெற்றி அடையவேண்டும் என்னும் ஊக்கத்தினை உருவாக்க வேண்டும்.
முயற்சி திருவினையாக்கும் என்னும் நம்பிக்கையினை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும்.
குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைத்து அவர்களை சோம்பேறியாக்குவதை விட அவர்களுக்கு கற்பனைத் திறனை அதிகரிக்கும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தலாம்.
இசையை சிறுவயது முதலே கற்கும் குழந்தைகளின்  IQ POWER மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இசையைக் கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதால் அவர்களின் அறிவுக்கூர்மை வளர்கிறது.
குழந்தைகளிடம் அதிகமாகப் பேச வேண்டும்.
அதிக சொற்களைப் பேசுதல் மிகவும் நல்லது. பெரியவர்கள்  பேசும்போது குழந்தைகளையும் அருகில் இருக்கச் செய்தல் வேண்டும்.
குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது ஐந்து ’இ’க்களை நினைவில் கொள்ள வேண்டும். ஐந்து ’C ’ க்கள்:-,  control, challenge, confidence, curiosity, contextualize ஆகியவைதான்!

கண்டரோல் என்பது எதிலும் கட்டுப்பாடுடன், தானே இருக்கக் குழந்தைகளைப் பழக்குவது.

சேலஞ்ச் என்பது சவாலைச் சமாளிக்க உங்கள் குழந்தையை அழைக்கும் விதமாக சவால் தரும் விஷயங்களை முன் வைப்பது

கான்பிடன்ஸ் என்பது எதிலும் ஒரு நம்பிக்கையை குழந்தையிடம் ஏற்படுத்துவது.

க்யூரியாசிட்டி என்பது எதையும் ஓர் ஆர்வத்துடன் கூர்ந்து ஆராயும் பழக்கத்தை மேற்கொள்ள வைப்பது.

கான்டெக்ஸ்டுவைலஸ் என்பது ஒரு விஷயத்தை நிஜ உலகுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் அணுகுமுறையை சொல்லித் தருவது. திரைப்படத்தில் அல்லது தொலைக்காட்சியில் வருவதற்கும் நிஜத்திற்கும் உள்ள சம்பந்தம் போன்றவற்றை சொல்லித் தந்தால் நிஜ உலகின் வாழ்க்கை பற்றிய நல்ல அணுகுமுறை ஏற்படும்.

இறுதியாக ஒர்கிங் மெமரி அல்லது ஷார்ட் டெர்ம் மெமரி எனப்படும் குறுகிய கால நினைவாற்றலில் ஒரு சமயம் ஒருவர் ஏழு விஷயங்களுக்கு மேல் நினைவில் கொள்ளமுடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரே சமயத்தில் ஏராளமான விஷயங்களைத் திணிக்காமல் அறிவுத் திறனை அளவோடு வளர்ப்பதோடு, சீரான இடைவெளியில் நினைவுத் திறனைக் கூட்டும் பயிற்சியைத் தந்தால் எந்தக் குழந்தையும் நம்பர் ஒன் குழந்தைதான்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

Unmaihal


1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய்
. ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். 
ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் 
கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது 
பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து 
சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து 
விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் 
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய 
செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!


6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் 
விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் 
நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான 
இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் 
நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) 
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, 
வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் 
விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் 
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் 
திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் 
வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி 
உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. 
ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் 
ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!


11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் 
தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் 
டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!